ஒரு பெற்றோர் தன் மகன் அல்லது மகளுக்கு எவ்வாறான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து தர வேண்டும்..

 


ஒரு பெற்றோர் தன் மகன் அல்லது மகளுக்கு எவ்வாறான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுத்து தர வேண்டும்.. தற்போதையை சூழ்நிலையில் பெற்றோர்கள் செய்யும் தவறு என்ன? ஏன் பெற்றோர்கள் தன் மகனுக்கு அழகான பெண்ணையும் தன் மகளுக்கு படித்தப் பட்டத்தாரி மட்டும் பார்க்கிறார்கள்.. அவ்வாறு அழகு மற்றும் படிப்பை மட்டும் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனை கள் பற்றி பெற்றோருக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?


💕💕பதில்💕💕


وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّىٰ يُؤْمِنَّ ۚ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ ۗ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّىٰ يُؤْمِنُوا ۚ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ ۗ أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ ۖ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ ۖ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக் கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணைவைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரையில் அவர்களுக்கு (நம்பிக்கையாளர் களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஒரு ஆண் உங்களைக் கவரக் கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்)   இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்னுடைய) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கின்றான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன்னுடைய வசனங்களை (மேலும்) விவரிக்கின்றான்.

(அல்குர்ஆன் : 2:221)


”எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால், அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால், சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்” என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா)


5138. கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா(ரலி) கூறினார்  கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்துவைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்)னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 67. திருமணம்


”கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும் பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான) வர்கள்தாம், குற்றம் குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர். இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு கண்ணியமான முறையில் உணவும் உண்டு. (அன்னூர் 24:26)


.

.


உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில் ‘மாலிக் பின் நழ்ர்’ என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).)


உம்மு ஸுலைம் (ரழி), இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே, உம்மு ஸுலைமை வெறுத்து விலகி விட்டார்.


தன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக, இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.


சில காலங்கள் கழிந்தன. மாலிக், இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு, பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.


கணவரை இழந்த உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில், மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்கவராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான் ‘அபூதல்ஹா’.


அபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும், மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால், அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால், உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ, அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது.


உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்: ”ஓ… அபூதல்ஹாவே! நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா? அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்”.


இதற்கு அபூதல்ஹா, ”ஆம் அப்படித்தான்!” என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி), ”அபூதல்ஹாவே! என்ன, உமக்கு வெட்கமாக இல்லையா? பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு, ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே? அதற்குச் சிரம் பணிகிறீரே?” என்று அறிவுரை கூறினார்.


இதைக் கேட்டு அபூதல்ஹா, சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசையூட்டும் விதமாக, ”உம்மு ஸுலைமே! உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன். பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்” என்றார். ஆனாலும், உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், ”இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று உறுதியாக மறுத்து விட்டார்.


மேலும் கூறினார்: ”அபூதல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால், நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக – நிராகரிப்பாளராக இருக்கிறீர். நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்று, நம்பிக்கை கொண்டால், அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன். அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)


திரும்பிச் சென்ற அபூதல்ஹா, மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து, முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறி ஆசையூட்டினார்.


இப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி), அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்:


”அபூதல்ஹாவே! ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர். அதற்கு தீ மூட்டினால், எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா?”


இந்த ஞானமிக்க பேச்சு, அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே, ”என்ன… கடவுளை எரிக்க முடியுமா? எரிந்து சாம்பலானால், அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா?” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல், ”நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை! இன்னும், சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்” என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி, ”அனஸே! எழு தயாராகு. உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை!” என்று கூறினார்கள்.


அனஸ் (ரழி) அவர்கள், சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க!


தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும், உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள், ”அபூதல்ஹாவே! நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன். அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை” என்பதாகச் சொல்லி விட்டார்கள்.


அபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு, தமக்குப் பொருத்தமான, நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக, இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை, நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்…?


”உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது, உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது” என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்!? (ஸஹீஹுல் புகாரி)


இன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

Comments